திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, பரமசிவ கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. மில் தொழிலாளி. இவரது மகன் தமிழ்செல்வன் (19).
இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பார்மஸி கல்லூரியில் பார்ம்.டி எனப்படும் 4 வருட பட்டப் படிப்பு படித்து வருகிறார். தற்போது முதலாம் ஆண்டு முடிந்து தமிழ்செல்வன் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கல்லூரிக்கு அருகே தனியாக அறை எடுத்து தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந்தேதி கல்லூரிக்கு செல்கிறேன் என கூறி விட்டு சென்ற அவர் பின்னர் மாலையில் அறைக்கும் திரும்பவில்லை. மேலும் வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் தமிழ் செல்வன் செல்போனுக்கு பெற்றோர் தொடர்பு கொண்டபோது, அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து பதறிய பெற்றோர் கல்லூரி மற்றும் பல்வேறு இடங்களில் மகனை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழ்செல்வன் எங்கு இருக்கிறார்? என்ன ஆனார்? என எந்த விபரமும் இதுவரைக்கும் தெரியவில்லை. மகன் மாயமானது குறித்து தந்தை நல்லதம்பி திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரியில் படிக்க விரும்பம் இல்லாமல் எங்காவது சென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews