செய்திகள்

திண்டுக்கல்லில் மாயமான கல்லூரி மாணவி பிணமாக மீட்பு

திண்டுக்கல்லில் தாயுடன் ஏற்பட்ட தகராறில் மாயமான கல்லூரி மாணவி பிணமாக மீட்கப்பட்டார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மேற்கு அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் மகள் வாழைசிவந்தி (வயது19). தந்தை இறந்து விட்டதால் தாய் ஈஸ்வரி பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் வாழைசிவந்தி அடிக்கடி கோபித்துக் கொண்டு வெளியே சென்று விடுவார். சம்பவத்தன்றும் தாயுடன் தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த வாழைசிவந்தி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாழைசிவந்தியை தேடி வந்தனர்.

இன்று காலை ஆர்.எம். காலனி 12-வது கிராஸ் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக நகர் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று விசாரித்தபோது அந்த இளம்பெண் மாயமான வாழைசிவந்தி என தெரிய வந்தது.

உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் செவ்வந்தி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மர்ம நபர்கள் அவரை கொன்று கிணற்றில் வீசி சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.