செய்திகள்

ஒடிசா முதல் மந்திரியின் செயலாளர் வீட்டில் தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கைது

ஒடிசா மாநிலத்தின் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலத்தின் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஒடிசா மாநிலத்தில் பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நவீன் பட்நாயக். இவரிடம் செயலாளராக இருப்பவர் வி.கே.நாராயணன். இவர் அலுவலக குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் பா.ஜ.க. கொடிகளுடன் ஒரு கும்பல் இவரது வீட்டை நெருங்கியது. கதவின் அருகில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டிகளை சேதப்படுத்தியது. முதல் மந்திரிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அங்கிருந்து சென்றனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் மந்திரியின் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து முதல் மந்திரி நவீன் பட்நாயக் கூறுகையில், இது உண்மையிலேயே அதிர்ச்சிகரமானது. தேசிய கட்சியை சேர்ந்த சிலர் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவித்தார். ஒடிசாவில் முதல் மந்திரியின் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.