செய்திகள்

லாலு பிரசாத் மகள் மிசா பாரதிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - வருமான வரித்துறை நடவடிக்கை

லாலு பிரசாத் மகள் மிசா பாரதி பினாமி சொத்துகளை குவித்து வழக்கில் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜர் ஆகாததால் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

ராஷ்டிரிய ஜனதாதள கட்சித்தலைவர் லாலு பிரசாத், அவரது மகள் மிசா பாரதி எம்.பி., உள்ளிட்டோர் ரூ.1,000 கோடி பினாமி சொத்துகளை குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மிசா பாரதிக்கும், அவரது கணவர் சைலேஷ் குமாருக்கும் சொந்தமான கட்டிடங்களில் வருமான வரித்துறையினர் சில வாரங்களுக்கு முன்பு அதிரடி சோதனைகள் நடத்தினர்.

இந்த நிலையில் மிசா பாரதி எம்.பி., நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜர் ஆகவில்லை.

இதையடுத்து அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் அவர் வரும் 12-ந் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு வருமான வரித்துறை உத்தரவிட்டு புதிய சம்மன் பிறப்பித்துள்ளது.

மிசா பாரதியின் கணவர் சைலேஷ் குமார், இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.