செய்திகள்

காஷ்மீரில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பிரிவினைவாத இயக்க தலைவர் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்ற பிரிவினைவாத இயக்க தலைவர் மிர்வாயிஸ் உமர் பாரூக்கை போலீசார் இன்று கைது செய்தனர்.

மாலை மலர்

காஷ்மீர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் தீவிரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சோபியான் மாவட்டத்தில் போகன் நகர் அருகே அமைக்கப்பட்டு உள்ள நடமாடும் வாகன சோதனை சாவடி மையத்தில் ராணுவத்தினர் கூட்டாக கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவ வீரர்களும் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் உட்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 4 பேர் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிவினவாத இயக்க தலைவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவர்களின் ஹரியாத் கட்சி அலுவலகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறப்பு ஆயுதப்படை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகங்கள் நிறைந்த பலகைகளை ஏந்திக்கொண்டு சோபியான் நகர் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். அனுமதியின்று ஊர்வலம் செல்ல முயன்ற மிர்வாயிஸ் உமர் பாரூக்கை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். #tamilnews