செய்திகள்

தேனி அருகே மைனர் பெண்களை கடத்திய வாலிபர்கள்

தேனி அருகே 3 மைனர் பெண்களை கடத்திச் சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

தேனி:

பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி கூர்மையா கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பாண்டிதேவி (வயது 17). கடந்த 6 மாதமாக ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வந்தனர். பாண்டி தேவி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வந்தார்.

சம்பவத்தன்று தனது தோழியை பார்த்து விட்டு வருவதாக கூறிச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் செல்வராணி தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தனது புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சிவகிருஷ்ணன் (21) என்பவர்தான் கடத்திச் சென்றிருக்க கூடும் என தெரிவித்ததின் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

கம்பம் அருகே உள்ள சுக்காங்கால் பட்டி வைரவன் கோவில் சந்து தெருவைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் பிரவீனா (17) பிளஸ் 2 முடித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் முருகன் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் ராயப்பன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த முருகன் மகன் சூர்யா (26) என்பவர்தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதன் பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி சொசைட்டி தெருவைச் சேர்ந்த பழனிகுமார் மகள் கலையரசி (17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் செல்வி தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர். #tamilnews