செய்திகள்

மீஞ்சூர் பஜாரில் குடோனில் பதுக்கிய ரூ. 20 லட்சம் குட்கா பறிமுதல்

மீஞ்சூர் பஜாரில் குடோனில் பதுக்கிய ரூ. 20 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொன்னேரி:

மிஞ்சூர் பஜாரில் உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டர்கள் பீமன், ரஞ்சித் மற்றும் போலீசார் குடோனில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து குட்கை, புகையிலை பொருட்கள் குடோனில் வைக்கப்படுவது தெரிந்தது.

இதையடுத்து லாரியுடன் குட்காவை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.

ஓசூரில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து குடோன் உரிமையாளர் மீஞ்சூரை சேர்ந்த பாலாஜி, லாரி டிரைவர் லோகநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இங்கு பதுக்கி வைக்கப்படும் குட்கா, புகையிலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுவது விசாரணையில் தெரிந்தது. இவர்களுடன் தொடர்பு உள்ளவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.