செய்திகள்

3 நாள் மருத்துவ முகாமில் 1½ லட்சம் பேர் பயன் அடைந்தனர்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கடந்த 3 நாட்களில் 1981 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1,63,063 பேர் பயன் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மாலை மலர்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை அடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பொது மக்களுக்கு தொற்று நோய் ஏற்படா வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை அளிக்க விரிவான ஏற்பாடுகள் செய்து வருகிறது.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சாரா பணியாளர்கள் உள்ளடங்கிய 601 மழைக்கால சிறப்பு மருத்துவ குழுக்கள் 6 மாவட்டங்களில் களத்தில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நடமாடும் மழைக்கால மருத்துவ வாகனத்தில் தேவையான அளவு மருந்துகள், மாத்திரைகள், சிரப்பு மற்றும் களிம்புகள் ஆகியவை இருப்பில் உள்ளன. இம்முகாம்கள் பகுதி வாரியாக பிரிந்து சென்று காலை 8.00 மணி முதல் மாலை வரை தொடர்ந்து மருத்துவ சேவையை வழங்கி வருகிறது.

கடந்த 3 நாட்களில் 1981 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1,63,063 பேர் பயன் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

சென்னை நகரில் நடத்தப்பட்ட நடமாடும் மழைக்கால சித்த மருத்துவ முகாம்கள் மூலம் மொத்தம் 95,371 நபர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கப்படுவதை பொது சுகாதாரத் துறையின் மூலம் உறுதி செய்வதற்கு 6 மாவட்டங்களில் 90 பொது சுகாதாரக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன.

மேலும், தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறையின் பன்முக சேவைகள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.