செய்திகள்

சிபிஐ விசாரணைக்கு வாடகை காரில் ரகசியமாக வந்து சென்ற விஜயபாஸ்கர்

குட்கா ஊழல் விசாரணைக்காக ஆஜராக வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் சி.பி.ஐ. அலுவலகத்திற்கு வாடகை காரில் ரகசியமாக வந்து சென்றது தெரியவந்துள்ளது. #GutkhaScam #Vijayabaskar

மாலை மலர்

சென்னை:

குட்கா ஊழல் விசாரணைக்காக அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்கள்.

அமைச்சர் ரமணா முன்வாசல் வழியாகவே வந்து சென்றார். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு எப்போது வருகிறார்? எப்போது செல்கிறார்? என்பது தெரியவே இல்லை. அவரை படம் பிடிப்பதற்காக சி.பி.ஐ. அலுவலக வாசலில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களும், வீடியோ கேமராமேன்களும் காத்து கிடந்தனர்.

ஆனால் 2 நாட்கள் நடந்த விசாரணைக்கும் முன்வாசல் வழியே வரவில்லை. வாடகை காரில் பின்வாசல் வழியாக யாருக்கும் தெரியாமல் வந்து சென்றார். குட்கா விவகாரம் பற்றி பலமுறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இதற்கு முன்னர் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. அதற்கு பதில் அளித்துள்ள அவர், என் மீதான குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் ரகசியமாக வந்து செல்வது புரியாத புதிராக உள்ளது. #GutkhaScam #MinisterVijayabaskar #Vijayabaskar