அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு மருத்துவ சேவை என்பது மகத்தான சேவை. அந்த பணியினை செய்து வரும் மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.
மருத்துவர்களின் கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலிக்கிறது. பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். அதனால் போராட்டத்தை கைவிட்டு விட்டு வர வேண்டும் என்று அழைக்கிறோம்.
சட்டமன்றத்தில் டாக்டர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறியிருக்கிறோம். ஏற்கனவே 2 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம்.
ஆதலால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உணர்வை தெரிவியுங்கள். அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளின் செயல்பாட்டினை மருத்துவத்துறையின் 3 இயக்குனர்களை கொண்டு கண்காணித்து வருகிறோம்.
மருத்துவர்களின் ஒரு பிரிவினர் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.