செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2 ,345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் - அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

அரசு மருத்துவமனைகளில் இந்த ஆண்டு 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். #MinisterVijayaBhaskar

மாலை மலர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரி அருகே சீறிப்பாயும் காளையை வீரர் அடக்குவது போன்ற தோற்றத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தத்ரூபமாக உலோக சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்து, மாலை அணிவித்து பேசினார். முன்னதாக புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 13 புதிய அதிநவீன அரசு பஸ்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகம் மற்றும் செவிலியர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கி பேசினார்.

தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் 35 அடி உயரம் கொண்ட நினைவு சின்னத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு விரைவில் 2 ஆயிரத்து 345 செவிலியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதேபோல் சிசு பராமரிப்பு மையங்களில் 640 சிறப்பு செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும். தமிழகத்திலேயே முதல்முறையாக ஜல்லிக்கட்டு காளையை வீரர் அடக்குவது போன்ற சிலை புதுக்கோட்டையில் மட்டும்தான் அமைக் கப்பட்டு உள்ளது, என்றார். #MinisterVijayaBhaskar