சென்னை:
சட்டசபையில் பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இ.கருணாநிதி குடிநீர் தட்டுப்பாடு குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் பல்லாவரம் நகராட்சி பகுதிக்கு கடல் குடிநீர் கொண்டு வரப்பட்டால் குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வரும். எனவே இந்த திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:-
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய இடங்களில் செயல்படுகிறது. இங்கிருந்து 400 எம்.எல்.டி. தண்ணீர் கிடைக்கும் போது பல்லாவரம், குரோம்பேட்டை பகுதிக்கு 38 எம்.எல்.டி. (380 லட்சம் லிட்டர்) குடிநீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டம் வரும் போது பல்லாவரம் பகுதிகளுக்கு கடல் குடிநீர் கொடுக்கக்கூடிய சூழ்நிலை அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.