கோவை:
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் சார்பில் 12-ம் வகுப்பு படிக்கும் 30 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு வினா, விடை வங்கி புத்தகம் வழங்கு விழா நிர்மலா கல்லூரியில் நடந்தது.
விழாவுக்கு அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு நீட் தேர்வு வினா வங்கி புத்தகத்தை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக வினா விடை வங்கி புத்தகங்களை வழங்கி வருகிறோம். இதனை வாங்கி படித்த மாணவ- மாணவிகள் அதிக மதிப்பெண்கள் எடுத்ததாக எங்களிடம் தெரிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு கல்வித்துறைக்காக அதிக நிதியை ஒதுக்கி உள்ளார். இதன் மூலம் மடிக்கணினி முதல் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பயனடைந்துள்ளனர். அவரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படித்து கலெக்டர், டாக்டர், கமிஷனராகி தமிழகத்துக்கு பெருமை சேர்த்து சேவை செய்ய வேண்டும். இதுதான் எங்கள் அனைவரது ஆசை
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநகர் மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி.ஜப்பார், பகுதி செயலாளர்கள் செல்வக்குமார், வக்கீல் விமல் சோமு மற்றும் மின்னல் சுரேஷ், பப்பாயா ராஜேஷ், சக்திவேல், ரகுராம், கணேசன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.