கோப்புப்படம் 
செய்திகள்

கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் அரசு பள்ளிகள் மீது நடவடிக்கை- அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ மாணவிகள் 5 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுவிட்டன. இன்று பிளஸ் 1 மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

2017-18 விடுபட்ட மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அவர்களுக்கு விரைவில் வழங்கப்படும். 12 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாட திட்டங்கள் இரண்டு ஆண்டுகளில் மாற்றியமைக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. கோபி பகுதியில் புறவழி சாலை அமைக்கப்படும். கோபி நகராட்சியில் ரூ.52 கோடியே 50 லட்சம் மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

தமிழகத்தில் ரூ.102 கோடி செலவில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு பணிகள் செய்வதற்காக சமூக சேவை நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இந்தியாவிலேயே முதல்முறையாக மடிக்கணினி வழங்கியது தமிழ்நாட்டில்தான். மத்திய அரசு சார்பில் 850 பள்ளிகளில் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் அட்டர் டிங்கர் லேப் தொடங்கப்பட உள்ளது.

கோப்புப்படம்

1-ம் வகுப்பு முதல் 8 -ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வண்ண சீருடைகள் இந்த மாதத்திற்குள் வழங்கப்படும். மேலும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாகவும், உள்ளாட்சித் துறை மூலமாகவும் பள்ளிகளில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருந்தால் அந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர்கள் கவுன்சிலிங் மூலம் இடமாறுதலுக்கு இன்று முதல் ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT