செய்திகள்

அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். #TNMinister #Sengottaiyan

மாலை மலர்

கவுந்தப்பாடி:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.

விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை வழங்கினர்.

அப்போது அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புதிய வண்ண யூனிபார்ம் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் பாடப்புத்தகம் முதல் 14 பொருட்களையும் அரசு வழங்கும்.

10 ஆண்டுகளாக பிளஸ்-2 மாணவர்கள் படித்து வந்த பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு முதல் புதிய பாட திட்டமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த 1,000 மாணவ- மாணவிகளை மருத்துவ மேல்படிப்புக்கு தேர்வாக வைப்பதே எங்களது இலக்கு.

அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகப்படுத்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் அடுத்த ஆண்டு முதல் தொடங்கப்படும். 9,10,11,12-ம் வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இண்டர்நெட் வசதி செய்து தரப்படும். பிப்ரவரியில் மாணவர்களுக்கு மடி கணினி வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். உலக அளவில் தமிழக மாணவர்களின் கல்வி தரம் உயர அன்றைய வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் செல்போன் மூலமாக ‘‘யூ டியூப்பில்’’ பார்க்கலாம். அன்றைய தினம் பள்ளிக்கு வராத மாணவர்கள் ஓய்வு நேரங்களில் பாடங்களை படிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan