செய்திகள்

ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு சாதாரணமானதுதான்: அமைச்சர் செல்லூர் ராஜூ

வெளிமார்க்கெட்டில் ரூ.40-க்கு விற்கப்படும் நிலையில் ரே‌ஷன் கடைகளில் சர்க்கரை விலை ரூ.25-க்கு விற்கப்படுவது சாதாரண உயர்வுதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மாலை மலர்

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட சம்மட்டிபுரம் பள்ளியில் அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- தமிழகத்தில் ரே‌ஷன் கடைகளில் ரூ.13.50-க்கு விற்கப்பட்ட சர்க்கரை, ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது ஏழை-எளிய மக்களை பாதிக்காதா?

பதில்:- வெளிமார்க்கெட்டில் சர்க்கரை ரூ.40-க்கு விற்கப்படுகிறது. எனவே ரூ.25 என்பது சாதாரண உயர்வு தான். மத்திய அரசு அளித்துவந்த மானியம் குறைக்கப்பட்டதன் காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மற்ற அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்களுக்கு அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க ரே‌ஷன் கடைகளில் கையிருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.

கே:- டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் பலர் உயிரிழந்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்தி வருவது பற்றி விமர்சனம் எழுந்துள்ளதே?

ப:- டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்தது. இதன் காரணமாக தமிழகத்தில் தற்போது டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே அதன் பாதிப்பு உள்ளது. மற்ற மாவட்டங்களில் டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


கே:- நடிகர் கமல்ஹாசன் எண்ணூர் துறைமுகத்தை பார்வையிட்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப:- நான் இப்போது அரசு விழாவில் கலந்து கொள்ள வந்துள்ளேன். எனவே அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை.

கே:- பொங்கல் பண்டிகைக்குள் எடப்பாடி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும் என்று டி.டி.வி.தினகரன் கூறி இருக்கிறாரே?

ப:- இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும். அம்மா அறிவித்த அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். அம்மாவின் லட்சிய கனவான இன்னும் 100 ஆண்டுகள் இந்த இயக்கம் தமிழக மக்களுக்கு களப்பணி ஆற்றும். ஜெயலலிதாவின் வாரிசுகளான எங்களுக்குதான் இரட்டை இலை கிடைக்கும்.