திருச்சி:
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை அகற்றப்போவதாக கூறி வரும் டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இன்னும் ஸ்லீப்பர் செல்களாக எடப்பாடி அணியில் இருப்பதாக கூறுகிறார். உரிய நேரத்தில் ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், சசிகலாவை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டது செல்லாது என எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்துள்ளது. எனினும், சசிகலா குறித்து யாரும் பெரிதாக விமர்சனம் செய்வதில்லை. சசிகலா பரோலில் வந்ததும் சில அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் சந்திப்பார்கள் என்று பேசப்பட்டது. ஆனால் இதுவரை அவரை யாரும் சந்திக்கவில்லை.
நேற்று அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, அ.தி.மு.க. ஆட்சி அமைவதற்கு சசிகலா தான் காரணம் என அவரை புகழ்ந்து பேசினார். இதன்மூலம், அவர் டிடிவி தினகரன் கூறும் ஸ்லீப்பர் செல்களில் ஒருவராக இருக்கலாம் என தகவல் பரவத் தொடங்கியது.
இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, ‘நான் ஸ்லீப்பர் செல் இல்லை’ என்றார்.
மேலும், சசிகலா குறித்து நான் கூறிய கருத்தை பெரிதுபடுத்தி உள்ளார்கள் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.