சென்னை:
கரும்பு விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பொன்முடி (தி.மு.க) கூறியதாவது:-
தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள். கரும்பு நிலுவைத் தொகை வழங்க வேண்டும். கரும்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் சம்பத் பேசும்போது, “கரும்பு விவசாயிகளுக்கு அரசு சர்க்கரை ஆலை சார்பில் வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகை ரூ.235 கோடி தான் பாக்கி இருக்கிறது.
தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் 1267 கோடி ரூபாய் வழங்கப்பட வேண்டி இருக்கிறது. இதை விவசாயிகளுக்கு விரைவாக வழங்க வேண்டும் என்று அரசு வற்புறுத்தி வருகிறது. விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு கொள்முதல் விலையை தற்போது உயர்த்த வாய்ப்பு இல்லை” என்றார்.