செய்திகள்

8 வழிச்சாலை அமைக்கப்பட்டதும் மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டதும் மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார். #chennaisalemexpressway

மதுரை:

மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசின் ஓராண்டு நிறைவு சாதனை விளக்க சைக்கிள் பேரணி மதுரையில் நடைபெற்றுள்ளது.

சுமார் 600 கி.மீட்டர் தூரம் 1000 இளைஞர்கள் சைக்கிளில் சென்று அரசின் சாதனைகளை 666 வருவாய் கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து விளக்கி உள்ளனர்.

ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த இந்த சைக்கிள் பேரணி மதுரையை அடுத்து தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்க உள்ளது. வருகிற 27-ந் தேதி சிவகங்கையில் 1000 இளைஞர்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணி நடக்கிறது. இதற்காக பேரவை நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

மதுரையில் எய்ம்ஸ் அமைந்தது போல தமிழகத்தில் நீண்ட நாட்கள் கோரிக்கை வைக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடினர். மக்கள் எண்ணங்களுக்கு, உணர்வுகளுக்கு மதிப்பளித்து அ.தி.மு.க. அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு பூட்டு போட்டு விட்டது.

எந்த திட்டத்துக்கும் அந்த திட்டம் வருவதற்கு முன்பே எதிர்க்கும் சிந்தனை இருக்க கூடாது. ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அதன் சாதக, பாதகங்களை அறிந்து மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தலாம். சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கும் தற்போது எழுந்துள்ள எதிர்ப்பு என்பது தேவையற்றது.

அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதும் அந்த சாலையை மக்கள் பயன் படுத்தி பார்க்கட்டும். அந்த சாலை தேவையில்லாதது என்று மக்கள் அப்போது உணர்ந்தால் இந்த அரசு மக்கள் உணர்வுக்கு நிச்சயம் மதிப்பளிக்கும். எனவே அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #chennaisalemexpressway