செய்திகள்

ஆதார் தகவல்களை திருட முடியாது - மத்திய மந்திரி திட்டவட்டம்

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது. 100 கோடி முறை முயற்சித்தாலும் அவற்றை திருட முடியாது என்று தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார். #Aadhaar

பனாஜி:

கோவா மாநிலம், பனாஜியில் நேற்று நடந்த கோவா தகவல் தொழில்நுட்ப நாள் கொண்டாட்டத்தில் மத்திய தகவல், தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு பேசினார். அவர் ஆதார் அடையாள அட்டையின் நம்பகத்தன்மை குறித்து திட்டவட்டமான கருத்து வெளியிட்டார்.

அப்போது அவர் கூறும்போது, “எனது ஆதார் அட்டையில் என்ன இருக்கிறது? எனது புகைப்படம் உள்ளது. நான் ஆண் என்பதும், என் பாட்னா நிரந்தர முகவரியும் உள்ளது. என்னவெல்லாம் இல்லை என்றால், என் மதம், என் சாதி, என் வருமானம், என் ஆரோக்கியம் குறித்த தகவல்கள், பிற அந்தரங்க தகவல்கள் இல்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும், “ஆனால் ஆதார் பதிவில் எனது கைவிரல் ரேகைப்பதிவுகள், என் கண்ணின் கருவிழிப்படலம் உள்ளது. அது பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. 100 கோடி முறை முயற்சித்தாலும் அவற்றை திருட முடியாது” என்றும் கூறினார்.  #Aadhaar