செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது விஜயேந்திரர் அமர்ந்திருந்ததில் தவறு ஏதும் இல்லை: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது விஜயேந்திரர் அமர்ந்திருந்ததில் தவறு ஏதும் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

மாலை மலர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழ் மொழிக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்ற இயக்கம் அ.தி.மு.க. இரட்டை இலையை எந்த காலத்திலும் அழிக்கமுடியாது. அ.தி.மு.க. ஒரு அம்சம் இல்லை வம்சம்.

ஆர்.கே.நகர் தேர்தல் ஒன்றை வைத்து மட்டும் அ.தி.மு.க.வை தீர்மானிக்க முடியாது.

வருகிற மார்ச்,மே மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது. அதில் அமோக வெற்றி பெறுவோம். மிகப்பெரிய தலைவர்கள் 2 பேரும் இல்லை என்றாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது.

மேற்கண்டவாறு அவர் பேசினார்.

பின்னர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-


கமல் ஒரு கிராமத்தை தத்தெடுப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை. “நாளை நமதே” திட்டம் என்பது எம்.ஜி.ஆர். படம். கமல் எங்க படத்தை வைத்து படம் ஓட்ட நினைக்கிறார். அது நடக்காது. அ.தி.மு.க. தமிழ்நாட்டை தத்தெடுத்து நல்லது செய்து வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது விஜயேந்திரர் அமர்ந்திருந்ததில் தவறில்லை. ஆட்சியையும் அரசியலையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. இரண்டும் ஒன்று சேர்ந்தது தான் அரசு.

ஜல்லிகட்டுக்கு சட்டத்தில் விதி விலக்கு அளித்தது போல் பட்டாசுக்கும் சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் .