மந்திரி பிரபு சவான் 
செய்திகள்

கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி: மந்திரி பிரபு சவான்

கர்நாடகத்தில், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கால்நடைகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி உள்ளதாக மந்திரி பிரபு சவான் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கொள்ளேகா :

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகாலுக்கு கர்நாடக கால்நடை துறை மந்திரி பிரபு சவான் வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மந்திரி பிரபு சவான் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தை போன்று கர்நாடகத்திலும் கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், கால்நடைகளை பாதுகாக்க கோசாலைகள் திறக்க சமூக அமைப்புகள் முன்வர வேண்டும். கோசாலை அமைப்போருக்கு அரசு நிதி உதவி செய்ய தயாராக உள்ளது.

பசுவதை தடை சட்டத்தை மீறுபவருக்கு 7 ஆண்டு சிறையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் ஆடு, மாடு, கோழிகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாநிலம் முழுவதும் 4,214 கால்நடை மருத்துவமனைகள் இயங்குகின்றன.

அவசர சிகிச்சைக்காக கால்நடைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல புதிதாக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த ஆம்புலன்ஸ் மூலம் கால்நடைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

துமகூரு மாவட்டம், ஷிரா தாலுகா சேலனஹள்ளியில் 20 ஏக்கர் பரப்பில் ரூ.44 கோடி செலவில் ஆட்டிறைச்சி கூடம் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.