செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக ஸ்டெர்லைட் ஆலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனை சுற்றுச்சுவரை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2012-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூட ஜெயலலிதா உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஆலையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். மாசு காட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கையால் ஆலை பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவுறுத்தலின்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனை செய்து, மாவட்ட நிர்வாகத்தின் உரிய கருத்து பெற்று நிரந்தர தீர்வு காணப்படும்.

துணைவேந்தர் நியமிப்பது ஆளுநரின் அதிகாரத்திற்குட்பட்டது. பல்வேறு தகுதியின் அடிப்படையில் இதற்கு முன்பாகவும் நியமிக்கப்பட்ட உதாரணம் உள்ளது. கமிட்டியின் அடிப்படிடையில் அரசு பரிந்துரை செய்கிறது. ஆளுநர் தான் இறுதி முடிவு எடுக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த தகுதி வாய்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் ஆளுநராகவும், பல்கலைக்கழக துணைவேந்தராகவும் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து வழக்கமாக நடைபெற்று வருகின்ற வழக்கம் தான். தி.மு.க. ஆட்சிகாலத்திலும் இப்படிப்பட்ட நடைமுறைகளும் நடந்துள்ளது. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தினை ஆளுநருக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. காவிமயமாகிறது என்று கூறுவது அரசியல் ரீதியான குற்றச்சாட்டு.

காவிரி மேலாண்மை அமைக்கக்கோரி சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், அனைத்துக்கட்சி கூட்டம், மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு என்று அரசு மூலமாக நாம் போராடி வந்தாலும், அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் உண்ணாவிரதம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

மத்தியஅரசு பாரபட்சம் இல்லாமல் நியாயமான தீர்வினை வழங்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அளித்த பேட்டியில், ‘ஈழ தமிழர்களுக்காக உண்ணாவிரதம் என்ற பெயரில் நாடகம் நடத்தியவர்களுக்கு, காவிரிக்காக அதிமுக உண்ணாவிரதம் இருந்தது நாடகமாகத்தான் தெரியும். இந்தியாவில் சிறந்து விளங்கும் கல்வியாளர்களை பல்வேறு மாநிலங்களில் நியமிக்கப்படுவது வழக்கம். அது போன்று தான் தமிழக அண்ணா பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தரை ஆளுனர் நியமனம் செய்துள்ளார்’ என்றார்.