அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் எம்.ஜி. ஆரால் இதே நாளில் ஆரம்பித்த இயக்கமாகும். புரட்சித்தலைவி மறைவுக்கு பிறகு இந்த இயக்கம் சிதறி விடும். சுக்கு நூறாகி விடும் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை.
அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களும் இந்த இயக்கத்தை எழுச்சியோடு பார்க்கிறார்கள். இன்னும் 3 ஆண்டில் பொன்விழா வருகிறது. அதையும் நாங்கள் தான் கொண்டாடுவோம். 100 ஆண்டு வரும்போது அந்த விழாவையும் நாங்கள்தான் கொண்டாடுவோம்.
அ.தி.மு.க.வையும், இரட்டை இலையையும் மீட்கப் போவதாக தினகரன் கூறுகிறார். அவரால் அது முடியவே முடியாது. கட்சியையும், ஆட்சியையும் பிடிக்க நினைக்கிறார். அதுவும் முடியாது.
எனவே கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் பார்த்தானாம். அந்த மாதிரி கதையா இருக்கிறது. அவரிடம் ஏதோ ஒரு 5 சதவீதம் அளவுக்கு ஆட்கள் உள்ளனர். அவர்களுக்காக ஏதேதோ சொல்கிறார். எனவே ஒன்றும் நடக்க போவதில்லை.
கடல்வற்றி கருவாடு சாப்பிட நினைத்த கொக்கு குடல்வற்றி செத்து போன கதைதான் தினகரனின் கதை.
மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்கிறார். ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான். உலகத்திலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். சர்க்காரியா கமிஷனை மறந்து விட்டு அவர் பேசக்கூடாது.
எனவே மக்கள்தான் இறுதி எஜமானார்கள். அடுத்து வரும் தேர்தல்களிலும் நாங்கள்தான் ஜெயிப்போம்.
இலங்கை அரசு 6 மீனவர்களுக்கு 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த புதிய சட்டத்தை ஏற்க இயலாது. மத்திய அரசு இதில் தலையிட்டு இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவோம்.