சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் நுண் கதிரியல் துறையில் ‘கேத் லேப்’ மற்றும் ஆஸ்பத்திரி வளாகத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
இயற்கைக்கு இடர்பாடுகள் அளிக்கக்கூடிய மற்றும் சுகாதாரமற்ற நிலையை கொண்ட 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கணவன்-மனைவி போல் மக்களுடன் ஒன்றி இருந்த பிளாஸ்டிக் பொருட்களை விவாகரத்து செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு இதயம் போன்றவர்கள். அவர்களை அரசு மதிக்கிறது. எனவே யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம்சாட்ட வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, “நுண் கதிரியல் துறையில் ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கம், ரத்தகசிவு, அடைப்பு, ரத்தநாள வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு நுண்துளைகள் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் அதிநவீன சிகிச்சை வழங்க ரூ.6.5கோடி மதிப்பில் பிப்லேன் டிஜிட்டல் சப்ஸ்ட்ராக்சன் ஆஞ்சியோகிராம் கேத்லேப் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூலம் மூளை, குடல் மற்றும் உள்ளுறுப்புகளில் ஏற்படும் ரத்த கசிவு, மற்றும் கல்லீரல் புற்றுநோய் உட்பட புற்றுநோய்களை தெளிவாக கண்டறிந்து, அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி குறைவான மருத்துவ செலவில் மக்களுக்கு சிகிச்சைகள் அளிக்க வேண்டும் என இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது” என்றார்.