செய்திகள்

3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்: திமுக பதறுவது ஏன்? ஜெயக்குமார் கேள்வி

3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு தி.மு.க. பதறுவது ஏன்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். #ministerjayakumar #3mlas #admk #dmk

மாலை மலர்

சென்னை:

அ.தி.மு.க.வின் கொறாடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விருத்தாச்சலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் ஆகிய 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி சபாநாயகர் தனபால் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து தி.மு.க. சார்பில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர் மானத்தை கொண்டுவரும் கடிதம் சட்டசபை செயலாளரிடம் அளிக்கப்பட்டது. தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான குழுவினர் இன்று கடிதத்தை அளித்தனர்.

இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. ஜனநாயக படுகொலை செய்வதாக ஆர்.எஸ்.பாரதி கூறுகிறார். ஆனால் ஜனநாயக படுகொலைக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க.வினர் தான்.

1989-ம் ஆண்டு பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவை முடியை பிடித்து இழுத்து அடித்து கேவலப்படுத்தினார்கள். அதன்பிறகு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ.வை அறை எல்லாம் காலிசெய்து அவரை துன்புறுத்தினார்கள்.

இந்த நிலையில் இப்போதைய சூழலில் கட்சியும் ஆட்சியும் நிலைக்க வேண்டும் என்பதற்காக கட்சியின் கொறடா கட்சி தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் கோரியுள்ளார்.

ஆதாரத்தின் அடிப்படையில் விளக்கம் கேட்டு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதற்கு தி.மு.க. பதறுவது ஏன்? எதுவாகிலும் அ.தி.மு.க. சட்டத்திற்கு உட்பட்டுதான் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #ministerjayakumar #3mlas #admk #dmk