சென்னையில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்களை வெளியே விவாதிக்கக் கூடாது. மைத்ரேயன் என்ன கருத்தை கூறியுள்ளார் என்று எனக்கு தெரியாது. அ.தி.மு.க. மிகப்பெரிய இயக்கம். பிரச்சனைகளை கட்சிக்குள் பேசி தீர்வு காண்பதுதான் தீர்வாகும்.
நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது இல்லை. வெற்றிவேல் பேசும் பேச்சுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை.
நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அ.தி.மு.க.வின் நாடி துடிப்பாக விளங்கியது. ஜெயா டி.வி. கட்சிக்கு இதயம் போன்றது. இப்போது நமது எம்.ஜி.ஆரும், ஜெயா டி.வி.யும் தி.மு.க.வுக்கு ஆதரவாக மாறி விட்டது.
எங்களுக்கெல்லாம் அம்மா சொல்லி கொடுத்தது என்னவென்றால் நமக்கு எதிரி தி.மு.க.வும், அதன் தலைவர் கருணாநிதியும் தான். இதில் எந்த சமரசத்தையும் ஏற்க முடியாது.
ஆனால் இப்போது நமது எம்.ஜி.ஆர் முரசொலி பத்திரிகை போல் மாறி விட்டது. ஜெயா டி.வி.யும் கலைஞர் டி.வி. போல் செயல்படுகிறது. இவை இரண்டும் தி.மு.க.வுடன் கைகோர்த்து கொண்டு செயல்படுகிறது.
சட்டசபையில் அம்மாவை அவமானப்படுத்தியவர் துரைமுருகன். அந்த துரைமுருகனை அழைத்து ஜெயா டி.வி.யில் பேட்டி எடுத்து ஒளிப்பரப்பு செய்கிறார்கள். இதன் மூலம் தி.மு.க. சார்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆர்.கே.நகர் தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயங்கவில்லை. தேர்தலை சந்திக்கும் திராணியுடன் உள்ளோம். இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.