செய்திகள்

தினசரி கதாநாயகன் சின்னதம்பி யானை -அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சின்னதம்பி யானை தினசரி கதாநாயகன் ஆகி இருப்பதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். #TNAssembly

சென்னை:

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அதிக மரங்கள் வளர்ப்பது குறித்தும், மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வன விலங்குகளை காட்டுக்குள் அனுப்புவது பற்றியும் உறுப்பினர்கள் கார்த்திகேயன், கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-

தற்போது சின்னதம்பி யானை தினசரி கதாநாயகன் ஆகி இருக்கிறது. தினமும் தொலைக்காட்சிகளில் அதுபற்றிய செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த யானையை என்ன செய்யப் போகிறீர்கள் என்று உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு வருகிறது. கோர்ட்டு உத்தரவுப்படி சின்னதம்பி யானை காட்டுக்குள் அனுப்புவதா? அல்லது மக்களுக்கு அது தொந்தரவு செய்யாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

காட்டுப் பன்றிகள் தொந்தரவு பற்றியும் குறிப்பிட்டார்கள் அவற்றை சுட்டு பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

மனிதர்களிடம் இருந்து மிருகங்களை காப்பதும், மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பதும் அரசின் கடமை. அதை இந்த அரசு சிறப்பாக செய்து வருகிறது.

வனப்பகுதியிலும் வாய்ப்பு உள்ள இடங்களிலும் மரங்களை வளர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தமிழ் நாட்டில் வனங்களின் நிலப்பரப்பு அதிகரித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் ரூ.54 கோடி செலவில் புயலால் பாதிக்காத பனை, சவுக்கு, தேக்கு போன்ற மரங்களை நட அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். #TNAssembly

SCROLL FOR NEXT