செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் அமோக வெற்றி பெறுவார் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

விழுப்புரம்:

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மழையை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

விழுப்புரம் மரகதபுரம் பகுதியில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததை அறிந்ததும் உடனடியாக அதிகாரிகள் அங்கு சென்று தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். பொம்மையார்பாளையம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்பது அங்குள்ள மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. அரசும் அதனை செய்யும் முனைப்பில் இருக்கிறது. ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக அது தள்ளிப்போய் கொண்டிருக்கிறது. தூண்டில் வளைவு அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆசிபெற்று கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க.அமோக வெற்றி பெறும். டி.டி.வி. தினகரனால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது.

இவ்வாறு அவர் கூறினார்.