செய்திகள்

முக்கூடல் அருகே மினி பஸ் மோதி வாலிபர் பலி

முக்கூடல் அருகே பைக்கில் சென்ற வாலிபர் மினி பஸ்சை முந்தி செல்ல முயன்றதால் நிலை தடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மாலை மலர்

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள பா.இலந்தை குளத்தை சேர்ந்தவர் தாமரை (வயது 27). கூலித் தொழிலாளியான இவர் நேற்று மாலை தனது பைக்கில் ஆலங்குளம் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஆலங்குளத்தில் இருந்து உடையாம்புளி நோக்கி ஒரு தனியார் மினி பஸ் சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சை முந்தி செல்வதற்காக தாமரை முயற்சித்தார். ஆனால் நிலை தடுமாறி பஸ்சின் அடியில் பைக் சிக்கிதால்  அவர் தவறி கீழே விழுந்ததில் தாமரை மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தாமரை பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து புதுப்பட்டியை சேர்ந்த மினி பஸ்  டிரைவர் தங்கராஜ் முக்கூடல் போலீசில் சரணடைந்தார். விபத்தில் பலியான தாமரைக்கு சந்தனமாரி என்ற மனைவியும், 1 வயதில் குழந்தையும் உள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் மங்கையற்கரசி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.