செய்திகள்

விருதுநகர் அருகே பால் வியாபாரியிடம் கந்துவட்டி கொடுமை: கலெக்டரிடம் புகார்

கந்து வட்டி கொடுமை காரணமாக விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பால் வியாபாரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.

விருதுநகர்:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் குடும்பமே தீக்குளித்து இறந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து கந்துவட்டி கொடுமையை ஒழிக்க அரசு மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள சூலக்கரைமேட்டைச் சேர்ந்த பால் வியாபாரி கணேசன், தனது மனைவி பஞ்சவர்ணத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் கலெக்டரிடம் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

குடும்ப சூழ்நிலை காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரைமேட்டை சேர்ந்த ரவீந்திரன், முத்து மாரி, சிவசாமி, கண்ணன் ஆகியோரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினேன்.

இதில் பல தவணைகளாக ரூ.18 லட்சம் வரை கட்டி உள்ளேன். ஆனால் மீண்டும் வட்டி கேட்டு 4 பேரும் தொந்தரவு செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் சிவஞானம், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT