ராமநாதபுரம்:
இலங்கையில் அடுத் தடுத்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்து 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியான சம்பவம், உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் எதிரொலியாக இந்தியாவின் கடலோர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை -இந்திய கடல்பகுதி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட கடல் பகுகளில் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்கள், ரெயில் நிலையங்கள், பயணிகள் ரெயில்கள் போன்றவற்றை தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும், பெங்களூரு காவல் துறை திடீர் எச்சரிக்கை வெளியிட்டது.
இது தொடர்பாக தமிழக காவல்துறைக்கு பெங்களூரு மாநகர காவல்துறை கடிதமும் அனுப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
முக்கிய இடங்களில் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரத்தில் மத இயக்கங்களை கண்காணிக்கும் நுண்ணறிவுப்பிரிவு போலீசார் ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.
மாவட்டத்தில் உள்ள விடுதிகளில் சந்தேகத்திற் கிடமான வகையில் யாரும் தங்கி உள்ளார்களா? என்பது தொடர்பாகவும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் இரவு முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. கடலோரப்பகுதிகளில் கடலோர காவல் படையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
சந்தேகத்திற்கிடமான வகையில் யாராவது சுற்றித்திரிந்தால் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #MilitantAttack