மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள கொய்னா பகுதியில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவான இந்த நிலஅதிர்வு நேற்று பின்னரவில் சுமார் 11.45 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலஅதிர்வு மகாராஷ்டிராவின் தெற்கு பகுதியில் உள்ள சங்க்லி, கோலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்டது. கொய்னா அணைக்கட்டு பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக நிலநடுக்க ஆய்வியல் துறை தகவல் தெரிவித்துள்ளது. நிலஅதிர்வினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் இன்னமும் கிடைக்கவில்லை.
இதற்கு முன்னதாக கடந்த மே 20-ல் அதே பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 2.8-ஆக நிலஅதிர்வு பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.