வேலைக்கும் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் 
செய்திகள்

மீண்டும் வேலைக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

குஜராத்தில் இருந்து பீகாருக்கு திரும்பிய பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்காக குஜராத் வந்துள்ளனர்.

கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையாக மார்ச் 25-ந்தேதி 21 நாட்கள் கொண்ட பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 14-ந்தேதி முடிவுடையும் நிலையில், 29 நாட்கள் கொண்ட 2-வது கட்ட ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனால் வேலைகள் அனைத்தும் தடைபட்டன.

இதனால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்கள் திரும்ப முடிவு செய்தனர். போக்குவரத்து தடையால் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது. பல இடங்களில் உணவு இன்றி தவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மே 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு சிறப்பு ரெயில்களை இயக்கியது. இதனால் உத்தர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களுக்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சென்றனர்.

தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் மீண்டும் வேலைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.

இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு பீகாரில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் வேலைக்காக திரும்பி வந்துள்ளனர். அதில் ஒருவர் ‘‘நான் பீகாரில் இருந்து வருகிறேன். என்னுடைய முதலாளி எனக்கு போன் செய்து வேலை தொடங்கிவிட்டது என்று கூறினார். அதனால் நான் திரும்பி வந்துள்ளேன்’’ என்றார்.