மதுரை:
சென்னையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கனிமொழி மதி, கீழடியில் தொல்லியல் அருங்காட்சியம் அமைக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அவர் தமது மனுவில், ‘மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழாய்வில் 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களை மைசூருக்கு கொண்டு சென்று காட்சிப்படுத்த மத்திய தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து இங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும்‘ என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அகழ்வாராய்ச்சி நடைபெற்று வரும் கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு சார்பில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதிகள் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.