செய்திகள்

எம்.ஜி.ஆர். நகரில் பொதுவழியை மறித்து கட்டப்பட்ட டாஸ்மாக் கடை இடித்து தள்ளப்பட்டது

எம்.ஜி.ஆர். நகரில் பொதுவழியை மறித்து கட்டப்பட்ட டாஸ்மாக் கடை இடித்து தள்ளப்பட்டது. இதன் காரணமாக 16 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பொதுவழி திறக்கப்பட்டது.

மாலை மலர்

சென்னை:

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அண்ணா மெயின் ரோட்டில் இருந்து குறிஞ்சி தெருவுக்கு செல்லும் 5 அடி வழிப்பாதை கடந்த 2001-ம் ஆண்டு முதல் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

அந்த தெருவை மறித்து கட்டிடம் கட்டப்பட்டது. அதில் பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடை பாருடன் செயல்பட்டு வந்தது. இங்கு சுமார் 3,500 வீடுகள் உள்ளன.

இந்த கடையை மூடக்கோரியும், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து பொது வழியை மீட்க வேண்டியும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக இருந்த ஜார்ஜ் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதனையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து, பொது வழியை மறித்து கட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கட்டிடத்தை நேற்று இடித்து தள்ளினர்.

இதன் காரணமாக 16 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பொதுவழி திறக்கப்பட்டது. மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கினர். டாஸ்மாக் கடை மூடுப்பட்டதால் நிம்மதி பெருமூச்சும் விட்டனர்.