செய்திகள்

மெக்சிகோவில் பெட்ரோல் திருட்டு கும்பல் தலைவன் சுட்டுக்கொலை

மெக்சிகோவில் பெட்ரோல் திருட்டு கும்பல் தலைவன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோவில் போதை பொருள் கடத்தலுக்கு அடுத்தப்படியாக பெட்ரோல் திருட்டு முக்கிய குற்றமாக உள்ளது. எண்ணை நிறுவனங்களில் இருந்து குழாய் மூலம் வரும் பெட்ரோல் மற்றும் டீசலை திருடி அதிக விலைக்கு ஒரு கும்பல் விற்று வருகிறது.

அக்கும்பலின் தலைவராக ஜீசஸ் மார்டின் என்பவர் செயல்பட்டு வந்தார். இவருக்கு கீழ் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இக்குற்றச் செயலுக்காக அவரை போலீசாரும், தொழில் போட்டியாளர்களும் தேடி வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜீசஸ் மார்டின் முகமாற்று பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையும், கைரேகை மாற்று ஆபரேசனும் செய்ய திட்டமிட்டார்.

அதற்காக எல்கலிம்பா நகரில் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேசன் நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்மநபர் திடீரென அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். அதில் குண்டு பாய்ந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

தொழில் போட்டி காரணமாக இவர் கொல்லப்பட் டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.