சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சியால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக 49 கன அடியாக இருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது.
21-ந் தேதி 42.16 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 42.09 அடியாக சரிந்தது.
இதற்கிடையே மாதேஸ்வரன் கோவிலில் நடைபெற உள்ள யுகாதி பண்டிகையையொட்டி கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த 20-ந் தேதி ஒகேனக்கலை வந்தடைந்தது.
கடந்த 19-ந் தேதி 270 கன அடியாக இருந்த நீர்வரத்து 20-ந் தேதி ஒகேனக்கலில் 1200 கன அடியாக அதிகரித்தது. நேற்று 750 கன அடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவில் தண்ணீர் வரத்து நீடிக்கிறது.
இதனால் ஒகேனக்கலில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.
கர்நாடக அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நேற்றிரவு மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் கடந்த சில நாட்களாக 49 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 176 கன அடியானது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. #MetturDam #tamilnews