மேட்டூர் அணை 
செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து கால்வாயில் 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

மாலை மலர்

சேலம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 6 ஆயிரத்து 943 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரத்து 998 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

 மேட்டூர் அணையில் இருந்து நேற்று காவிரியில் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலையும் அதே அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கால்வாயில் 700 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவே நீடிக்கிறது.

இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறையும்பட்சத்தில் அணை நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.