மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட புளியமரத்துக் குழி என்ற இடத்தில் கல்லாறு ஆற்றின் கரையோரப் பகுதியில் பெண் காட்டெருமை தள்ளாடிய நிலையில் கீழே விழுந்து கிடப்பதாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச்சரக அலுவலர் செல்வராஜ், வனவர் முத்து கிருஷ்ணமூர்த்தி, வனக்காப்பாளர்கள் அண்ணாமலை, பிரகாஷ் மற்றும் வேட்டை தடுப்புக்காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டெருமையை பார்த்தனர். அப்போது காட்டெருமை இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து தேக்கம்பட்டி கால்நடை உதவி மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு அவரது முன்னிலையில் காட்டெருமையின் உடல்பிரேத பரிசோ தனை செய்யப்பட்டது. பரிசோதனையின் போது காட்டெருமை வயிற்றுக்குள் கன்று ஒன்று இறந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காட்டெருமை மற்றும் கன்று இரண்டையும் குழி தோண்டி புதைத்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் கூறியதாவது:-
இறந்த பெண் காட்டெருமைக்கு சுமார் 10 வயது இருக்கும். அதன் வயிற்றில் கன்று இருந்தது. கன்றை ஈன்ற முடியாமல் அந்த காட்டெருமை இறந்துள்ளது. மேலும் வயிற்றுக்குள் இருந்த கன்று இறந்த நிலையிலேயே இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.