செய்திகள்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக வழிகாட்டி பலகைகள்

மெட்ரோ ரெயில் பயணிகள் சிரமமின்றி ரெயில் பயணம் செய்வதற்காக கூடுதல் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல்கட்டமாக 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு வழித்தட பாதை அமைக்கப்பட்டு மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

பயணிகள், பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரிக்கு ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வழித்தட பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வருகை தரும் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்து வருகிறது.

மெட்ரோ ரெயில் நிலையங்களுக்குள் நுழையும் பயணிகள் எளிதில் மெட்ரோ ரெயில் சேவையை பெறுவதற்கும், தயக்கம் - பயமின்றி செல்வதற்கும் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வழிகாட்டி பலகைகளில் மெட்ரோ ரெயில் நிலையம் பற்றிய குறிப்புகள், மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் எங்கே, எப்படி, எந்த வழியாக செல்ல வேண்டும் என்று அறிவிப்புகள் எழுதப்பட்டு உள்ளது. மெட்ரோ ரெயில் நிலைய நுழைவு வாயில்கள், மெட்ரோ சுரங்க நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 500 மீட்டர் இடைவெளி தூரத்துக்குள் அமைக்கப்படுகிறது.

வடபழனி, கோயம்பேடு, அரும்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக இந்த வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் பயணிகள் சிரமமின்றி ரெயில் பயணம் செய்வதற்காக மெட்ரோ ரெயில் நிலையங்களில் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டதன் மூலம் பயணிகள் இனிமேல் எளிதில் மெட்ரோ ரெயில் பயணம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.