செய்திகள்

வருவாய் வசூல் அதிகரித்தால் 12 மற்றும் 18 சதவீத ஜி.எஸ்.டி. விகிதம் ஒன்றாக இணைக்கப்படும்: அருண் ஜெட்லி தகவல்

ஜி.எஸ்.டி. வரி உறுதிப்படுத்தப்பட்டு வருவாய் வசூல் அதிகரித்தால் 12 மற்றும் 18 சதவீத வரி விகிதங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மாலை மலர்

ஜி.எஸ்.டி. வரி உறுதிப்படுத்தப்பட்டு வருவாய் வசூல் அதிகரித்தால் 12 மற்றும் 18 சதவீத வரி விகிதங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் தவிர பிற பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் 12 மற்றும் 18 சதவீதங்களை ஒன்றாக இணைக்க வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், இது தொடர்பாக கூறியதாவது:-

ஜி.எஸ்.டி.க்கு முந்தைய வரி மட்டங்களை அடிப்படையாக கொண்டு பல்வேறு வரிவிகிதங்கள் ஜி.எஸ்.டி.யில் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இதில் 28 சதவீத வரிப்பொருட்களின் எண்ணிக்கையை நாங்கள் குறைத்துள்ளோம். இந்த விகிதத்தை ஆடம்பர பொருட்கள் மற்றும் பாவ பொருட்களுக்கு மட்டும் நிர்ணயித்து இந்த பட்டியலை மேலும் குறைக்க முடியும்.

மேலும் 12 மற்றும் 18 சதவீதங்களை ஒரே சதவீதமாக மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலிக்கும். அதாவது 12 சதவீதத்தில் உள்ள சில பொருட்களை 5 சதவீதத்துக்கு மாற்றி, 12 மற்றும் 18 சதவீதங்களை குறிப்பிட்ட ஒரு இடைத்தர சதவீதமாக மாற்றப்படும். இறுதியில் 2 அடுக்கு ஜி.எஸ்.டி. விகிதத்தை நோக்கியும் நாடு தள்ளப்படும்.

ஆனால் இவை அனைத்தும் ஜி.எஸ்.டி. விகிதம் நிலைப்படுத்தப்பட்டு வரி வருவாய் வசூல் அதிகரிப்பதை பொறுத்தே அமையும். அரசின் வருவாய் நிலவரத்தை பொறுத்தே இந்த மாற்றங்களின் வேகம் இருக்கும்.

பொருளாதார அடிப்படைகளை மேம்படுத்துவதன் மூலம் சாதாரணமாகவே இந்தியா 7 முதல் 8 சதவீத வளர்ச்சிக்கு தன்னை தகுதிப்படுத்தி உள்ளது. இதில் வளர்ச்சி குறைந்தால் 7 சதவீதத்தை நோக்கியும், அதிகரித்தால் 8 சதவீதத்தை நோக்கியும் இருக்கும். உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் இது ஏற்கனவே 2.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நெருங்கி விட்டது.

இரட்டை இலக்க பணவீக்க விகிதம் என்ற பழைய சகாப்தத்தில் இருந்து நாடு விடுபட்டு விட்டது. இதில் எங்கள் சட்டப்பூர்வ இலக்கு 4 சதவீதம் ஆகும். நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க முடிந்திருக்கிறது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக நிதி பற்றாக்குறையை குறைப்பத்தில் முன்மாதிரி செயல்திறனை இந்தியா கொண்டிருக்கிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய உள்கட்டமைப்பு துறைக்கு ரூ.50 லட்சம் கோடி அளவிலான முதலீடு தேவைப்படுகிறது. வரி புகார் இல்லாத சமூகத்தை உருவாக்குவது இந்தியாவின் மிகப்பெரிய சவால்களில் முக்கியமானது.