புதுச்சேரி:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால் 10 ரூபாய் நாணயங்களை பெற வியாபாரிகள் மறுத்தனர். இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவித்தது.
இருப்பினும் தமிழகம் மற்றும் புதுவையில் 10 ரூபாய் நாணயத்தை பெற வியாபாரிகள் மறுத்தனர். அதோடு வங்கிகளும் 10 ரூபாய் நாணயத்தை பெறவில்லை. இதுதொடர்பாக வங்கிகள் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து வங்கிகள் 10 ரூபாய் நாணயத்தை பெற்றுக்கொண்டனர்.
ஆனால் புதுவையில் இதுவரை 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் பெற மறுத்து வருகிறார்கள். இதனால் 10 ரூபாய் நாணயம் அடியோடு புழக்கத்திலேயே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு வீடு 10 ரூபாய் நாணயங்கள் தேங்கி உள்ளது. இது தொடர்பாக வங்கிகள்தான் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
புதுவையை பொறுத்த மட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியன் வங்கியில்தான் கணக்கு வைத்துள்ளனர். ஆனால், இந்த வங்கியும் 10 ரூபாய் நாணயம் குறித்து இந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது.