செய்திகள்

கடைகளை காலி செய்ய அவகாசம் வழங்க வேண்டும்: ஐகோர்ட்டில் வியாபாரிகள் மனு

கடைகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வியாபாரிகள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு வாசலில் கடந்த 2-ந் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த கடைகள் எரிந்து நாசமாயின.

தீ விபத்துக்கு ஒரு கடையில் திருஷ்டி சுற்றி வைக்கப்பட்ட கற்பூரம் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதனை வியாபாரிகள் மறுத்துள்ளனர். மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது தீ விபத்து நடந்த வீரவசந்தராயர் மண்டபத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதி பகுதியில் உள்ள 115 கடைகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதற்காக நிர்வாகத்தின் சார்பில் வியாபாரிகளுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு கையெழுத்து கேட்டுள்ளனர். ஆனால் வியாபாரிகள் கையெழுத்திட மறுத்து தங்களுக்கு கடை நடத்த வேறு இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் இன்று 115 கடை உரிமையாளர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கடைகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளன. இந்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது. #tamilnews

SCROLL FOR NEXT