செய்திகள்

மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்துக்கொலை- தொழிலாளி தப்பி ஓட்டம்

காஞ்சீபுரம் அருகே மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த வேளியூர் கிராமம், கட்டபொம்மன் தெருவில் வசித்து வந்தவர் கோவிந்தராஜன் (வயது 21). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

இவர் அடிக்கடி அருகில் இருக்கும் வீடுகளை தட்டி வந்தார். மேலும் அவ்வழியே செல்பவர்களிடமும் சம்பந்தம் இல்லாமல் பேசி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற கோவிந்தராஜன், பக்கத்து தெருவில் வசிக்கும் தொழிலாளி வேலாயுதம் என்பவரது வீட்டை தட்டி கூச்சலிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வேலாயுதம் அருகில் கிடந்த கட்டையால் கோவிந்தராஜனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜன் அங்கேயே மயங்கி விழுந்தார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் கோவிந்தராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவிந்தராஜன் இறந்தது பற்றி அறிந்ததும் வேலாயுதம் தப்பி ஓடி விட்டார். அவரை காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews

SCROLL FOR NEXT