விபத்தில் சிக்கிய கார் உருக்குலைந்து கிடப்பதை படத்தில் காணலாம். 
செய்திகள்

மேலூர் அருகே விபத்து- முதியவர் பலி

மேலூர் அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். பெண்கள்-சிறுமிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

மாலை மலர்

மேலூர்:

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுல்தான்மைதீன் (வயது 55). இவர் மதுரையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார்.

இன்று காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

பாண்டாங்குடி விலக்கு அருகே வந்தபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

காரில் இருந்த சுல்தான் மைதீன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது குடும்பத்தினர் மீரா, அசார், வஜிதா, பாத்திமா, சிறுமிகள் அமீரா, சபீனா உள்பட 7 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கிய 7 பேரை மீட்டு மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சபீனாவை தவிர மற்ற 6 பேரின் உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, இன்ஸ்பெக்டர் பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.