செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் உருகும் பனிப்பாறைகள்... தென்படும் சடலங்கள்

காலநிலை மாற்றத்தின் விளைவாக எவரெஸ்ட் சிகரத்தின் பனிப்பாறைகள் உருகி, புதையுண்ட சடலங்கள் தென்படுகின்றன. #EverestGlaciersMelt #deadbodiesrecovered

நவீன காலத்தில் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை பெருக்கம் மற்றும் புவி வெப்பமயமாதல், காற்றுமாசு உள்ளிட்ட காரணங்களால் எதிர்வரும் காலங்களில் பனிமலைகள் முழுவதும் உருகி நீராக மாறக் கூடும் என சில ஆய்வுகள் கூறி வருகின்றன.

இதற்கிடையில் எவரெஸ்ட் பகுதியில், உயரும் வெப்பநிலை குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இதில் 1922ம் ஆண்டு முதல் இன்று வரை 200க்கும் மேற்பட்ட மலையேறும் வீரர்கள் எவரெஸ்ட் மலையில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் பலரது உடல்கள் பனியில் புதைந்து மீட்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில் 2100ல் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், பனிப்பாறைகள் உருகி நேபாளத்தில் தூத்கோசி ஆற்றின் நீரோட்டப்போக்கை மாற்றிவிடும், வெள்ள அபாயத்தில் மலைவாழ்வினங்கள் அதிகம் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் 75 சதவீதம் மலைகள் உருகி முற்றிலும் மறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்த விவரங்கள் செயற்கைகோள்கள் அனுப்பிய புகைப்படங்களை மையமாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

இது குறித்து நேபாளத்தின் மலையேறும் சங்கத்தினர் கூறுகையில், 'பனிப்பாறைகளின் இடையில் சிக்கி இருக்கும் சடலங்களை மீட்க, மீட்பு படையினர் அங்கு ஆபத்தான முறையில் முகாமிட்டு மீட்டு வருகின்றனர். எங்கள் சங்கத்தின் சார்பில் 2008 முதல் இதுவரை 7 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு அதிகமாக செலவிடப்படுகிறது. எனவே மத்திய அரசு, இந்த மீட்பு  நடவடிக்கைகளை மேலும் விரிவுப்படுத்த வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தார். #EverestGlaciersMelt #deadbodiesrecovered