செய்திகள்

கைது உத்தரவுக்கு எதிராக சி.பி.ஐ. கோர்ட்டில் மெஹுல் சோக்சி மனு

ரூ.13,000 கோடி கடன் மோசடியில் சிக்கியுள்ள பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி தன்மீதான கைது உத்தரவுக்கு எதிராக மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

மும்பை:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்சி வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து மெஹுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரன்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்தது.

இந்நிலையில், தன்மீதான கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மும்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மெஹுல் சோக்சி சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #MehulChoksi #nonbailablewarrant

SCROLL FOR NEXT