செய்திகள்

மாட்டு இறைச்சிக்கு ஆதரவாக மேகாலயா பா.ஜனதா குரல்

மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ளதற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில் மேகாலயாவில் பாரதிய ஜனதா கட்சியே மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

மத்திய அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ளதற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த நிலையில் மேகாலயாவில் பாரதிய ஜனதா கட்சியே மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக இந்த கட்சியின் மாநில தலைவர்களில் ஒருவரான பெர்னார்டு மராக் கூறி இருப்பதாவது:-

மேகாலயாவில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இந்த மக்களின் முக்கிய உணவாக மாட்டு இறைச்சி உள்ளது.

எனவே, மாட்டு இறைச்சி தடையை நாங்கள் ஏற்க முடியாது. மாட்டு இறைச்சியின் விலை இங்கு அதிகமாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதன் விலையை குறைப்போம் என்று கூறி வருகிறோம்.

இந்த நிலையில் மத்திய அரசின் தடை கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட இந்த மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். மேகாலயா பழங்குடியின மக்களை கொண்ட மாநிலம். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

எங்களுடைய எதிர்ப்பை கட்சி மேலிடத்துக்கு சொல்ல வேண்டும் என்று மாநில தலைமையிடம் நான் கூறி இருக்கிறேன். மேகாலயா மாநில கட்சி பொறுப்பாளரிடமும் இது பற்றி புகார் தெரிவிக்க இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.