ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டது. இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, அ.தி.மு.க அம்மா அணியிலும் பிளவு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகளை நியமிக்க தினகரனுக்கு அதிகாரம் இல்லை என்று எடப்பாடி அணியினர் தீர்மானம் நிறைவேற்றினர். இதனால் அணிகள் இணைப்பு முயற்சியில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. தொண்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்தார் டி.டி.வி.தினகரன். முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூரில் இன்று பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. சாமி மற்றும் தினகரன் ஆதரவாளர்கள் செய்தனர்.
மேலூர்-அழகர்கோவில் ரோட்டில் ஏற்பாடு செய்த இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி நிர்வாகிகள் போலீசாரிடம் விண்ணப்பித்திருந்தனர். போலீஸ் தரப்பில் எந்த தகவலும் இல்லாததால், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தினகரன் பங்கேற்கும் மேலூர் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.